கலெக்டர் நேர்மையாக இருந்ததை தாங்க முடியாமல் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டது

india-tamilnadu-water
By Kanagasooriyam Jan 11, 2021 03:37 PM GMT
Report

புதுச்சேரியில் கலெக்டர் பூர்வா கார்குக்கு வழங்கப்பட்ட குடிநீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் தான் பூர்வா கார்க். இவர் மிகவும் நேர்மையாகவும் அதே நேரத்தில் சுறுசுறுப்பாகவும் செயல்படும் ஒரு அற்புதமான அதிகாரி.

இந்நிலையில், புதுச்சேரி வழுதாவூர் சாலை பேட்டையன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில், அவர் தாக்கத்திற்காக தண்ணீர் அருந்த முயன்றுள்ளார்.

அப்போது குடிநீரில் சிறிய அளவில் மாற்றம் தெரிந்ததை அடுத்து, அதை பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது, அதில் விஷம் கலந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அந்த குடிநீர் நிறுவனம் புதுச்சேரியில் உள்ள ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமானது என்பதால் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது கருத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.