கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்ட 120 வயது மூதாட்டி! குவியும் பாராட்டு
காஷ்மீரைச் சேர்ந்த 120 வயது மூதாட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு சமூகவலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிலர் தடுப்பூசி போடவே பயப்படுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ அல்லது பக்கவிளைவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டோலிதேவி என்ற 120 வயது கொண்ட மூதாட்டி கடந்த 17 ம் தேதி கொரோனா தடுப்பூசியை தாமாக முன்வந்து போட்டு கொண்டார். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் பரவத் தொடங்கியது. இதைக் கேள்விப்பட்டு பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்த வடக்கு மண்டல லெப்டினட் கமாண்டர் ஜெனரல் ஜோஷி, டோலி தேவி வீட்டுக்கு சென்று மூதாட்டியை வாழ்த்தினார்.
இது குறித்து 120 மூதாட்டி டோலிதேவி கூறுகையில், ஊசி போட்ட பின் எவ்வித தொந்தரவும் எனக்கு ஏற்படவில்லை. ஒரு காய்ச்சலும் எனக்கு வரவில்லை. நான் மிகவும் நலமாக இருப்பதாக உணர்கிறேன் என்றார்.