ஆப்கனில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள் மீட்பு!
இந்திய விமானப்படையின் சி -130 ஜே விமானம் மூலம் காபூலில் சிக்கி இருந்த 85க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் பயந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கிறார்கள்.
வணிக ரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கியிருக்கிறது. தாயகம் திரும்புவது மற்றும் இதர உதவிகளுக்காக அந்த சிறப்பு பிரிவை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட தொலைபேசி எண்களுடன் கூடுதலாக தொலைபேசி எண்களையும், வாட்ஸ்அப் எண்களையும், மின்னஞ்சல் முகவரிகளையும் வெளியிட்டப்பட்டுள்ளது. காபூலில் உள்ள இந்திய மக்களை வெளியேற்ற இந்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
