சத்தமே இல்லாமல் உலக சாதனை படைத்த இந்திய அணி - கொண்டாடும் ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிய,2வது டெஸ்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பல்வேறு சிறப்புகள் கிடைத்துள்ளன. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவின் வெற்றி பாதை தொடர்ந்துக் கொண்டே வருகிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் 14 வெற்றிகளுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 10 வெற்றிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அதன்பின் சொந்த மண்ணில் இந்திய அணி கடைசியாக கடந்த 2012 - 2013 ஆம் ஆண்டு காலத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை இழந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பிறகு விளையாடிய 14 டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி வெற்றியை மட்டுமே கண்டுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த 14 டெஸ்ட் தொடர்களில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இதனுடன் சேர்த்து இந்திய அணி மற்றொரு புதிய சாதனையையும் செய்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெறும் வெற்றி இதுவே ஆகும். நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இதனால் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.