நிறைவடைந்தது பாராலிம்பிக் 2024 - புதிய வரலாறு படைத்த இந்தியா
பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 29 பதக்கங்களை வென்றுள்ளது.
பாரிஸ் பாராலிம்பிக் 2024
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நேற்று வரை பாராலிம்பிக்(08.09.2024) போட்டி நடைபெற்றது.
170 நாடுகள் சார்பில் 4463 வீரர்கள் கலந்து கொண்ட பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 84 வீரர்கள் 12 போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்தியா
இதில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் இந்தியா 18-வது இடத்தை பிடித்தது.
சீனா 220 பதக்கங்களுடன் முதலிடத்திலும், பிரிட்டன் 124 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், 105 பதக்கங்களுடன் அமெரிக்கா 3 வது இடத்திலும் உள்ளது.
தமிழக வீரர்கள்
இதில் அதிகபட்சமாக தடகளம் பிரிவில், நான்கு தங்கம், 6 வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும், பேட்மிண்டன் விளையாட்டில் 5 பதக்கங்கள், துப்பாக்கிச்சுடுதலில் 4 பதக்கங்கள், வில்வித்தையில் 2 பதக்கங்கள்மற்றும் ஜூடோவில் ஒரு பதக்கத்தையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன், மணிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் பதக்கம் வென்றனர். துளசிமதி முருகேசன் ஒலிம்பிக் பாராபேட்மிண்டனில் பதக்கத்தை (வெள்ளி) வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
முன்னேற்றம்
கடந்த முறை டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என 19 பதக்கங்களுடன் 24வது இடத்தில் இருந்தது.
பாராலிம்பிக்கில் இந்தியா 19 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்த நிலையில் இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களை கைப்பற்றியதுடன் 6 இடங்கள் முன்னேறி 18 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.