ஐபிஎல், உலகக்கோப்பை பற்றி யோசித்தால் மனச்சோர்வே ஏற்படும் - பும்ரா கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் எதுவும் எளிதில் நடந்து விடாது என்று கூறிய ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல், உலகக்கோப்பை டி20 போட்டிகள் பற்றி இப்போது யோசித்தால் மனச்சோர்வே ஏற்படும் என்று கூறியுள்ளார்.
ஏன் இப்படி கூறியுள்ளார் பும்ரா? "டெஸ்ட் போட்டி விளையாடும்போது, எத்தனை ஓவர்கள் பந்துவீச முடியும், இதற்கு முன் என்ன செய்தோம் என்பது பற்றி சிந்திக்கக் கூடாது. தற்போதுள்ள பணி அணிக்காகப் பந்துவீசுவது மட்டும்தான். நீண்ட காலம் எனது அணிக்காக ஆட விரும்புகிறேன். அதற்காகக் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன். கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கிறேன்.
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். உலகக் கோப்பை, ஐபிஎல் பற்றி நான் பெரிதாகச் சிந்திக்கவில்லை. அவ்வாறு சிந்தித்தால் மனரீதியாகச் சோர்ந்துவிடுவீர்கள். தற்போதுள்ள சூழல் மீது கவனம் செலுத்தி ஒவ்வொரு பந்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்''. என்றார் பும்ரா.
நேற்று 5ம் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு வந்து ஒரு 6 ஓவர் ஸ்பெல்லில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பு முனை ஏற்படுத்தினார், அது வெறும் விக்கெட்டுகள் அல்ல ஆலி போப், பேர்ஸ்டோ ஆகியோரது தன்னம்பிக்கையையே காலி செய்யும் 'சியரிங்' யார்க்கர் என்பார்களே அதுதான் அது. வந்தவுடன் பவுல்டு ஆனால் எந்த பேட்ஸ்மெனுக்கும் கோபம் வரவே செய்யும்.
அப்படிப்பட்ட கோபத்தை இங்கிலாந்துக்கு நேற்று கிளப்பி விட்டார் பும்ரா. ரிவர்ஸ் ஸ்விங்கில் அசத்தினார். ஷர்துல் தாக்கூர் 100 ரன்களுக்கும் மேல் அடித்ததோடு 2வது இன்னிங்சில் தொடக்க ஜோடியை உடைத்தார், பிறகு தூண் ஜோ ரூட்டை பவுல்டு செய்தார், இது தொடர்பாக பும்ரா கூறும்போது, "பெரிய விஷயம், ஷர்துல் 2 பெரிய இன்னிங்ஸை பேட்டிங்கில் ஆடினார்.
அதுதான் எங்களை தூண்டி விட்டது, நாங்கள் முதல் நாள் மாலையில் 2 இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். 2வது இன்னிங்சில் நாம் நல்ல ஸ்கோரை எடுத்திருந்தாலும் ஷர்துல் தாக்கூர் அணியின் ஸ்கோரை பாதுகாப்பு எல்லைக்குக் கொண்டு சென்றார்.
பவுலிங்கில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது தாக்கம் மிகப்பெரியது, எப்பவுமே 5வது பவுலர் ஒருவர் தேவை அவர் பேட்டிங்கும் செய்தால் அது அணிக்கு பெரிய சாதகமாகும், அவர் இப்படியே தொடர வாழ்த்துகிறேன்" என்றார் பும்ரா.