ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - அவதூறு பரப்பிய பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவை முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்து பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகள் சில தவறாக அவதூறு பரப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், இது தொடர்பாக 2 பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையின் சைபர் கிரைம் பிரிவு இந்த 2 டுவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.