இந்திய அணியை ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் தான் - மிரண்டு போன நியூசிலாந்து வீரர்
இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நாளை துவங்கவுள்ளது.
முதல்முறையாக இத்தொடர் நடைபெறுவதால், இறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெற போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இரு அணி வீரர்களின் பலம், பலவீனம் மற்றும் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துக் கூறி வருகின்றனர்.
தற்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரும் இறுதிப் போட்டி குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணில் மட்டுமல்ல வெளிநாட்டு நாட்டு ஆடுகளங்களில் மற்றும் பொதுவான ஆடுகளங்களில் விளையாடும்போதுகூட பலம் வாய்ந்த அணியாகத்தான் இருக்கும் என்றும் இளம் வீரர்கள் பலபேர் அந்த அணியில் தங்களது திறமைகளை நிரூபித்திருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர்களால்தான் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது எனவும் தெரிவித்தார்.
நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன், இங்கிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினோம். இதனால் காலநிலை உட்பட சில விஷயங்களை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்திய அணிக்கு அப்படி எதுவும் இல்லை. அவர்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தைப் பார்த்தால், அதை அவர்கள் பயிற்சி ஆட்டமாக நினைத்து விளையாடியதுபோல் தெரியவில்லை.
ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை வெளிக்காட்டினர். கொடுக்கப்பட்ட சில நாட்களுக்குள் அவர்கள் இறுதிப் போட்டிக்குத் தயாராகி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பேட்டிங் மட்டுமில்லாமல் அவர்களின் பௌலிங் வரிசையும் மிக வலுவானதாகவே இருக்கிறது” என ராஸ் டெய்லர் தெரிவித்தார்.