முதல் டெஸ்டில் இந்திய அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்கு... சாதிக்குமா? சறுக்குமா?
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கும், இந்திய அணி 278 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 2வது இன்னிங்ஸில் 85.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகப்பட்சமாக இந்திய அணி வீரர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 209 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், ரோகித் சர்மா மற்றும் புஜாரா தலா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 1 நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.