ஏழை மக்கள் யாரும் பசியுடன் தூங்கக் கூடாது - பிரதமர் மோடி பேச்சு
பாரதிய ஜனதா கட்சியின் 42வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதனையொட்டி, பிரதமர் மோடி காணொலி வாயிலாக பாஜக எம்.பிக்களிடமும், தொண்டர்களிடமும் உரையாற்றினார். சமீபத்தில் 4 மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்கு தொண்டர்களுக்கு பிரதமர் மோடி நன்றியை தெரிவித்தார்.
அப்போது, கட்சியின் நிறுவன தினத்தையொட்டி, இன்று முதல் 15 நாட்கள் சமூக நீதிக்கான நாட்களாக கடைபிடிக்கப்படுவதால் இந்நாட்களில், மக்கள் சேவையில் ஈடுபடுமாறு எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
சமூகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களுக்காக மத்திய அரசு கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறும் பாஜக எம்.பிக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும், ஏழைகள் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று பிரதமர் பேசினார்.