விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்... 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமருக்கு விவசாயிகள் கடிதம்
3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் தங்களது 6 கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனே நடத்த வேண்டும் என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா வலியுறுத்தி இருக்கிறது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது -
அனைத்து விவசாயிகளுக்கும் விளைபயிர்களுக்கு சாகுபடி செலவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்.
இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற வேண்டும்.
போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.
டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும்.
லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கவேண்டும். அவரை கைது செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.