இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் - உஷாரா இருங்க மக்களே..!
இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கடும் மழை, புயல், வெயில் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் தீவிரமாக இருந்து வருகிறது. கடலின் ஆழத்தில் இருந்து ஆழமான நீரை மேலே கொண்டு வரும் பூமத்திய ரேகை, காற்று வலுவாக மாறும் போது, லா நினா உருவாகிறது.
இது உலக அளவில் தீவிரமான வானிலை மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவுகள் இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் காலமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லா நினாவால் வடகிழக்கு ஆசியா முழுக்கவே குளிர்காலத்தில் அதிக மின்சாரத் தேவை இருக்கும், இதனால் மின்பற்றாக்குறை ஏற்படும் என்று DTN வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் ரென்னி வான்டேவேஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு வட மாநிலங்களில் வழக்கத்தை விட குளிர் காலம் முன்னதாகவே தொடங்கிவிட்டது என்றும், சில இடங்களில் மைனஸ் ஐந்து டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருப்பதாகவும் சிம்லாவின் IMD மையம் தெரிவித்துள்ளது.
எனவே முதலில் குளிர்காலத்திற்காக ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறை, உணவுகள், பழக்க வழக்கம், ஆடைகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக குளிர் மற்றும் மைனஸ் டிகிரி வெப்பநிலையால் உடலின் வெப்ப நிலை குறைந்து உடல் செயல்பாடுகளை பாதிக்கும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
குளிர் காற்று உடலின் வெப்பத்தை உடனடியாக குறைத்து விடும் தன்மை கொண்டதால் பெரும்பாலும் வெளிப்புறத்தில் செல்வதை தவிர்த்திடுங்கள். குளிர்காலத்துக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிவது உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும். குளிரான சூழல் இருந்தாலும், சுறுசுறுப்பாக செயல்படுங்கள். சோம்பேறித்தனமாக இருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.