ஒலிம்பிக்கில் சாதனை - விடாமல் துரத்தும் சா(தீ) - வீராங்கனையின் சாதியை சொல்லி இழிவு!!
உலக அரங்குகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கப் போராடிக் கொண்டிருக்கும் வீராங்கனைகள் மீது சாதியைக் காரணம் காட்டி அவதூறு பரப்பிக்கொண்டிருக்கும் விஷமிகளின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 போட்டியில் இந்தியா இதுவரை 1 வெள்ளிப் பதக்கமும் 3 வெண்கல பதக்கங்களும் வென்றிருக்கிறது. இதன் மூலம் பதக்க எண்ணிக்கை தற்போது 4-ஆக உயர்ந்து, பதக்கப் பட்டியலில் இந்தியா 66-வது இடத்தில் இருக்கிறது.
ஒருபுறம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியிருக்கும் நிலையில், மறுபுறம் நேற்றைய போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அர்ஜென்டினா அணியுடனான அரையிறுதி போட்டியில் கடைசி நொடி வரையிலும் போராடி 1-2 என்று கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்தது.
அதன் மூலம், அர்ஜென்டினா அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது குறித்து இந்தியர்கள் அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், மிகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு முன்பு சில நபர்கள் சாதியைச் சுட்டிக்காட்டி இந்திய அணியின் தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று அர்ஜென்டினாவிடம் போராடி வீழ்ந்த, அடுத்த சில நிமிடங்களில் உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் சென்றிருக்கின்றனர்.
வீட்டில் இந்திய அணியின் தோல்வியால் வந்தனாவின் குடும்பத்தினர் அனைவரும் சோகத்திலிருந்த நேரத்தில், 2 நபர்களும் வந்தனாவின் வீட்டிற்கு முன்பாக பட்டாசுகளை வெடித்து, கிண்டல் செய்யும் விதமாக நடனமாடி இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடியிருக்கின்றனர்.
மேலும் இந்திய அணியில் பல பட்டியலினத்தை சேர்ந்த பெண்கள் இருப்பதால் தான், இந்தியா தோற்றுவிட்டதாக கூறியும் கிண்டல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.