யார் அடுத்த இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி? வெளியான தகவல்
இந்திய நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தமிழ்நாட்டில் குன்னுார் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
அவரின் மரணச் செய்தியால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக 2020ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார்.
ராணுவ, விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் 3 தளபதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.
நேற்று காலை டெல்லியிலிருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 அதிகாரிகள் பயணம் மேற்கொண்டனர்.
இந்த ஹெலிகாப்டர் குன்னுார் அருகே பனிமூட்டம் காரணமாக தாழ்வாக பறந்தததாக கூறப்படுகிறது. இதனால் மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிபின் ராவத் மறைவிற்கு பிறகு, இந்திய நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த 10 நாட்களுக்குள் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட இருக்கிறார்.
இதன் அடிப்படையில், தற்போதுள்ள ராணுவ தளபதியான நரவானே அடுத்த இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.