செஞ்சுரியன் போட்டியில், தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சும்மா தெறிக்கவிட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் - ஷமி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது.
முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 272 ரன் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (122), ரகானே (40) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்தான நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்ரிக்கா சார்பில் லுங்கிடி 6, ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் டீன் எல்கர், மார்க்ரம் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. இந்திய தரப்பில் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டினர்.
பும்ரா வீசிய முதல் ஓவரில் எல்கர் (1) போல்டானார். முகமது ஷமி, தன் பங்கிற்கு முதலில் பீட்டர்சனை (15) போல்டாக்கினார்.
அடுத்து மார்க்ரமையும் (13) போல்டாக்க, மறுபக்கம் சிராஜ், வான்டெர் துசெனை (3) வெளியேற்ற, தென் ஆப்ரிக்க அணி 32 ரன்னுக்கு 4 விக்கெட் என திணறியது.
5வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது, ஷர்துல் பந்தில் குயின்டன் டி காக் (34) அவுட்டானார்.
மீண்டும் மிரட்டிய ஷமி, மோல்டரை (12) அவுட்டாக்கினார். மறுபக்கம் பவுமா அரைசதம் எட்டினார். இவர் 52 ரன் எடுத்த போது, ஷமி பந்தில் அவுட்டானார்.
ஜான்சென் (19) கிளம்ப, ரபாடாவை (25) ஷமி அவுட் செய்தார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்னுக்கு சுருண்டது.
இந்தியா சார்பில் முகமது ஷமி 5, ஷர்துல் தாகூர், பும்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.