இஸ்லாமாபாத் மசூதி குண்டுவெடிப்பு: பழிபோடும் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினரின் மசூதியில் நேற்று தொழுகைளின் போது இடம் பெற்ற பயங்கர குண்டுவெடிப்பு சம்வம் குறித்து பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
குறித்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இந்தியா - ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி இருப்பதாக குறிப்பிடும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மசூதி குண்டு வெடிப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்ததுடன் 169 போ் வரையில் காயமடைந்தனர்.
சந்தேக நபர் ஒருவர் மசூதி மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தெஹ்ரிக் -ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புடன் தொடா்புடைய ஆப்கானிஸ்தான் பயங்கரவாதி இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதாக காவல் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இஸ்லாமிக் ஸ்டேட்(ஐஎஸ்) அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப், தற்கொலைப் படை பயங்கரவாதி, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,இந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா-ஆப்கானிஸ்தானின் கூட்டுச் சதி கண்டறியப்பட்டுள்ளது எனவும் சதிகாரா்களுக்கு எதிராக முழு பலத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா கண்டனம்
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை அடிப்படை ஆதாரமற்றது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன் குறித்த தாக்குதல் மிகவும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளதுடன் உயிரிழந்தோருக்கு இந்தியா ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானின் தனது சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கும் பிரச்னைகளைத் தீவிரமாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, தனது சொந்தப் பிரச்னைகளுக்கு மற்றவர்கள் மீது பழிசுமத்தி, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளவது துரதிர்ஷ்டவசமானது.
இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த இந்தியாவின் கண்டன அறிக்கை உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.