மோசமாக பந்துவீசும் இந்திய அணி - கழற்றி விடப்படும் முக்கிய இந்திய அணி வீரர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி மோசமாக பந்துவீசி வருவது ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. முதல் போட்டியிலும் 31 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர். இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் பெவுமா மற்றும் வெண்டர்டுசனுக்கு ரன்களை வாரி வழங்கியது.
இதனால் 2வது போட்டியில் பந்துவீச்சாளர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கினார் ராகுல். ஆனால் வழக்கத்தை விட நேற்றும் பந்துவீச்சாளர்கள் சொதப்பினர்.
குறிப்பாக புவனேஸ்வர் குமார் 8 ஓவர்கள் வீசி 67 ரன்களை விட்டு கொடுத்தார். ஆனால் விக்கெட் எதும் எடுக்கவில்லை. சொல்லப்போனால் பும்ராவை தவிர வேறு எந்த பந்துவீச்சாளரும் தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தரவில்லை.
இந்நிலையில் ஸ்விங் மற்றும் வேகம் இரண்டையும் இழந்த புவனேஸ்வர் குமார் இனி இந்திய அணியில் இடம்பெறவதே சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பந்துவீச்சு பிரிவில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது.
அதன்படி சிராஜ், ஆவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, ஹர்சல் பட்டேல், இஷான் போரேல், உம்ரான் மாலிக், தீபக் சாஹர் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருணின் பங்களிப்பு தான்.
தற்போது அவர் இல்லாதது இந்திய அணிக்கு குறையாக பார்க்கப்படுகிறது. தற்போதைய பயிற்சியாளர் பாராஸ் மாம்பரேவின் செயல்பாடை ஒரே தொடரில் கணிப்பது தவறு. இதனால் தொடர்ந்து பந்துவீச்சில் சொதப்பி வரும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.