கோதுமை ஏற்றுமதிக்கு அதிரடி தடை - மத்திய அரசின் அறிவிப்பு என்ன காரணம்?

Government Of India
By Petchi Avudaiappan May 14, 2022 04:51 AM GMT
Report

இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததன் எதிரொலியாக ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 

இதனிடையே எகிப்து உள்ளிட்ட சில நாடுகள் இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய திட்டம் போட்டிருந்தன. அதேசமயம் தனியார் ஏற்றுமதி நிறுவனங்களும் விவசாயிகளிடம் இருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. அந்த வகையில் தனியார் அதிக விலை கொடுத்து கோதுமை வாங்குவதால் அரசுக்கு குறைந்த அளவே கோதுமைகளை விவசாயிகள் வழங்கி வந்தனர். 

இதனால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்காணித்து வந்த மத்திய அரசு இந்தியாவில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது. அதிகளவு ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.