உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.தீர்மானம் - வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற அதில் 3 நாடுகள் பங்கேற்கவில்லை.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை முறியடித்தது. இதனால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா. சபையில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்தியாவிடம் ரஷ்யாவும், அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டது.
இதன் காரணமாக இந்தியா-ரஷ்யாஉறவில் நெருக்கத்தையும், இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசலையும் ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.