பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’ : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு

By Nandhini Nov 22, 2021 07:00 AM GMT
Report

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு இன்று ‛வீர் சக்ரா விருது' வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் அபிநந்தன். இவர் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக செயலாற்றி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள்.

அப்போது, பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் திடீரென ஊடுரவி தீவிரவாத முகாம்களை தகர்த்தன. 2019ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.இத்தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51வது படைப்பிரிவை பாராட்டி அப்போது ‛குழு விருது' வழங்கப்பட்டது.

இதனையடுத்து, அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ராணுவ கமாண்டர் அபிநந்தனுக்கு குழு கேப்டனாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அபிநந்தனுக்கு ‛வீர் சக்ரா விருது' வழங்கி கவுவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை முறியடித்த, இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி பிரகாஷ் ஜாதவுக்கு, 2வது மிக உயர்ந்த வீர விருதான ‛கீர்த்தி சக்ரா' (மரணத்திற்குப் பின்) வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும், 5 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றபோது தன்னுயிரை இழந்த மேஜர் விபூதி சங்கர் தௌண்டியாலுக்கு ‛சௌர்ய சக்ரா' (மரணத்திற்குப் பின்) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது முக்கிய தீவிரவாதியை கொலை செய்ததற்காக நைப் சுபேதார் சோம்பிர் (மரணத்திற்குப் பின்) ‛சௌரிய சக்ரா விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய  அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா விருது’ : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு | India Abinandhan Award