பிரபல பாடகர் ராஜன் மிஸ்ரா கொரோனாவால் உயிரிழந்தார்- பிரதமர் மோடி உருக்கமான பதிவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல கிளாசிக்கல் பாடகர் ராஜன் மிஸ்ரா (70) சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரபல கிளாசிக்கல் பாடகர் ராஜன் மிஸ்ரா 1978ம் ஆண்டு இலங்கையில் தனது முதல் நிகழ்ச்சி மூலம் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
இதனையடுத்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 2007ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்’விருது வழங்கி கவுரவப்படுத்தியது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜன் மிஸ்ரா, மிகவும் ஆபத்தான நிலையில் நேற்று டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதய பிரச்சனைகள் இருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜன் மிஸ்ரா உயிரிழந்தார்.
ராஜன் மிஸ்ராவின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், கிளாசிக்கல் பாடும் உலகில் தனது அழியாத அடையாளத்தை விட்டு வெளியேறிய பண்டிட் ராஜன் மிஸ்ராவின் சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது.
பனாரஸ் கரானாவுடன் மிஸ்ராவின் தொடர்பு கலை மற்றும் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன் என்று உருக்கமான இரங்கலை பதிவிட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில், பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ராஜன் மிஸ்ராவின் மறைவு பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ராஜன் மிஸ்ரா வெளியேறுவது கலை மற்றும் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
எனது இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.