ஹரியானாவில் இன்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியது. அதன் பின்னர், அந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10 மணி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹரியானாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றுக்கொண்டிருப்பதால் ஊரடங்கு நேரத்தை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், மாலை 6 மணியில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும், கடைகள் அனைத்தையும் 6 மணியோடு மூடிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல, ஊரடங்கு நேரத்தின் போது கடைகள் செயல்படுவதால் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடிப்பதாகவும், அதன் காரணமாகவே ஊரடங்கு நேரத்தை நீட்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பேசிய குருகிராம் துணை ஆணையர், மாநில அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளார்.