டெல்லியில் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் பேரழிவு நடைபெறும் பட்சத்தில் ஒரு போதும் நமக்கு மன்னிப்பே கிடையாது என்று பிரதமரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக பேசியுள்ளார்.
கொரோனா 2ம் அலை தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர்மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
அப்போது டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லி மருத்துவமனைகளுக்கு போதுமான ஆக்சிஜன் இருப்பு கையிருப்பில் இல்லை.
இதனால், மோசமான பேரழிவு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. எனவே, பிரதமரின் வழிகாட்டுதல்கள் தேவை. ஆக்சிஜன் கொண்டு வரும் டேங்கர் லாரிகள் டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி மக்கள் பெரும் வேதனையில் தவிக்கிறார்கள். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் பேரழிவு நடைபெறும் பட்சத்தில் ஒரு போதும் நமக்கு மன்னிப்பே கிடையாது.
டெல்லிக்குள் தடையின்றி ஆக்சிஜன் லாரிகள் நுழைய முதலமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கைகூப்பிக் கேட்டுக் கொள்வதாக உருக்கமாக பேசினார்.