கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு - இந்திய விமானங்களுக்குத் தடை
இந்தியாவிலிருந்து துபாய் மற்றும் கனடாவுக்கு விமானங்களில் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலையின் பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுக்கொண்டிருப்பதால் இங்கிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகள் விமான போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது.
இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த 10 நாட்களுக்கு, இந்தியாவிலிருந்து துபாய் வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, துபாய் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதே போல, இந்தியா வழியாக துபாய் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
துபாய் குடியுரிமை பெற்றவர்கள், அரசு முறை பயணமாக வருபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு கனடாவும் தடை விதித்துள்ளது.