பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாமா? சைபர் க்ரைம் போலீஸ் விளக்கம்
நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக செல்போனில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் செயலி இல்லாத செல்போனே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு வாட்ஸ் அப் செயலி அதிகளவில் மக்களுக்கு பயன்படுகிறது. வாட்ஸ் அப் உதவியால் ஒருவரையொருவர் சுலபமாக தொடர்பு கொள்ள முடிகிறது. நிறுவனங்களின் வேலைகளை சுபலமாக்க வாட்ஸ் அப் செயலி பெரும் உதவியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் பயனர்களிடையே ஒரு புதிய வதந்தி பரவி வந்து கொண்டிருக்கிறது. அதாவது பிங்க் நிறத்தில் புதியதாக வாட்ஸ்அப் அறிமுகம் ஆகியுள்ளதாகவும், இந்த செயலி பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வருகிறது. ஆனால் இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இது குறித்து சைபர் க்ரைம் செக்யூரிட்டி போலீஸ் ராஜஹாரியா கூறுகையில், பிங்க் நிற வாட்ஸ் அப் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இதன் மூலம் செல்போன் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியானது மிகவும் ஆபத்தானது. இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தால் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் ஹேக் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.