இந்தியாவில் முதல் முறையாக 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவிலேயே முதல் முறையாக ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு வனவிலங்குப் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கங்களின் எச்சிலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை மத்திய அரசின் சிஎஎஸ்ஐஆர் அமைப்பு ஆய்வு செய்ததில் சிங்கங்களுக்கு கோவிட-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆலோசகர் ராகேஷ் மிஸ்ராவும் உறுதி செய்தார்.
சிங்கங்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று எந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாலும் ஏற்படவில்லை. மனிதர்கள் மூலமும் பரவியிருக்க எந்த ஆதாரமும் இல்லை. தற்போது சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நலமுடன் இருக்கின்றன என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆலோசகர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில்,
'ஆசிய சிங்கங்களின் எச்சில் மாதிரி முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டது. அதில் சிங்கங்கள் நெருக்கமாக வாழ்ந்திருப்பதால், தொற்று ஏற்பட்டிருக்கும். சிங்கங்களின் மலத்தையும் எடுத்துப் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் எச்சிலை எடுக்க முடியாத நிலையில் இந்த முறையைக் கையாளலாம்.
இந்த 8 சிங்கங்களின் உடலில் இருந்த வைரஸ்களும் உருமாறிய கரோனா வைரஸ்கள் அல்ல. சிங்கங்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. சிங்கங்கள் நன்றாகச் சாப்பிடுகின்றன, நலமாக இருக்கின்றன. மனிதர்களைப் போல சிங்கங்களும் பாலூட்டிகள் என்பதால், கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கின்றன.
வனவிலங்குப் பூங்கா ஊழியர்கள் மூலம் கொரோனா பரவியிருக்கலாம். சிங்கங்களின் மலம், எச்சில் போன்றவை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக்கூடத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன' எனத் தெரிவித்தார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்,
' சிங்கங்கள் இயல்பாக இருக்கின்றன, வழக்கம்போல் பழகுகின்றன. சிங்கங்களின் எச்சில், மலம் ஆகியவற்றை அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்பான ஆய்வகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு 8 சிங்கங்களும் நன்றாக ஒத்துழைக்கின்றன, நன்றாகத் தேறி வருகின்றன. பழகும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. வாரங்கல்லில் உள்ள காகத்யா வன உயிரியல் பூங்கா, கவால் மற்றும் அம்ராபாத்தில் உள்ள புலிகள் சரணாலயம், தெலங்கானாவில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்கள் கடந்த 2ஆம் தேதி முதல் மூடப்பட்டன' எனத் தெரிவித்துள்ளது.