3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி புதிய சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
IND vs WI
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து இதே மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
3வது ஒருநாள் போட்டி
குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 24 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்தது. இந்திய அணி வீரர் சுப்மன் கில் சதத்தை நெருங்கிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
257 ரன்கள்
தொடர்ந்து மழை பெய்ததால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. சுப்மன் கில் 98, தவான் 58, ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்கள் எடுத்தனர். இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 257 ரன்கள் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட் செய்ய தொடங்கியது. அந்த அணியில் பிரண்டன் கிங், கேப்டன் நிக்கோலஸ் பூரன் இருவரும் தலா 42 ரன்கள் அடித்த நிலையில் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதல் முறையாக
இதன்மூலம் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுவதுமாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக தொடரை வென்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
அதேபோல் ஒரே வருடத்தில் ஒரே அணிக்கு எதிராக 2 ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்த 3 அணி என்ற பெருமை இந்திய அணி பெற்றது.