மீண்டும் ஏமாற்றிய இந்திய அணி வீரர்கள் - 3வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் எப்படி?
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தனது முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதனிடையே தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.இதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதிகப்பட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள், புஜாரா 43 ரன்கள் விளாச இந்திய அணி 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கேப்டன் எல்கர் (3 ரன்கள்) விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியை விட 206 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஆட்டத்தைப் போல இந்திய அணி வீரர்கள் இந்த ஆட்டத்திலும் பேட்டிங்கில் சொதப்பியது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.