மிரட்டும் மழையால் இந்தியா- நியூசிலாந்து ஆட்டத்தில் தொடரும் சிக்கல்
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.
116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் முனைப்புடன் காத்திருந்தது.
ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இப்போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.