வேண்டுமென்றே ரத்து செய்யப்பட்டதா 5வது டெஸ்ட் போட்டி? - சர்ச்சையில் சிக்கிய இந்தியா

IPL2021 INDvsENG
By Petchi Avudaiappan Sep 10, 2021 10:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக இந்திய அணி நிர்வாகத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தொற்று அச்சத்தால் இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்தது.

இதுதான் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் வீரர்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என்றே முடிவு வந்தது. இங்கிலாந்து வீரர்களோ 'நாங்கள் களமிறங்க தயார்' என்று தெரிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியும் ரெடியாகத் தான் இருந்தது. ஆனால் இப்போட்டி முடிந்த அடுத்த 2 தினங்களில் செப்டம்பர் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.

இந்த கடைசி டெஸ்ட் போட்டியை, இரு அணி நிர்வாகங்களும் நினைத்திருந்தால் இன்னும் 2 நாட்கள் தள்ளிப்போட்டுக் கூட நடத்தியிருக்கலாம்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளதால் அதன் தேதிகளை மாற்ற முடியாது என்ற காரணத்தாலும், ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் பட்சத்தில் வீரர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட ஐபிஎல் அணிகள் பாதிக்கப்படும் என்ற பயத்தினாலும் பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள் விளையாடவில்லை என்றால் ஐபிஎல் உரிமையாளர்கள் இழப்பை சந்திக்க நேரிடுமே என்ற கலக்கத்தாலும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் இருந்து இந்திய அணி பின்வாங்கியது என கூறப்படுகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவு என்ன என்பது இதுவரை இறுதியாகவில்லை. கடைசி போட்டியில் இந்தியா விளையாட முடியாது என்று கூறியிருப்பதால் 2-1 என்று தொடரை இந்தியா வென்றுவிட்டதாக அறிவிக்க நிச்சயம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாது. அப்படி இல்லையெனில் கடைசி போட்டியில் இங்கிலாந்து ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும் என அந்நாட்டு வாரியம் நிர்பந்திக்கும்.

அதற்கு பிசிசிஐ ஒப்புக் கொண்டால் இந்திய வீரர்கள் தங்கள் உழைப்பைக்கொட்டி பெற்ற முன்னிலை வீணாய் போகும். இந்த தொடர் 2-2 என்று டிராவாகும். பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது என்றும், வேறு தேதியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று கூறியிருக்கிறது. இப்படியே சென்றால் விரைவில் பல எதிர்கேள்விகளை பிசிசிஐ எதிர்கொள்ள தன்னை தயார்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.