நீங்க முன்னாடி நின்று வழிநடத்துனது போதும் பின்னாடி போங்க - கோலிக்கு அறிவுரை வழங்கிய கிரிக்கெட் வீரர்
இந்திய கேப்டன் விராட் கோலி பார்முக்கு வர திணறிக் கொண்டிருக்கிறார், இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் 124 ரன்களையே இதுவரை எடுத்துள்ளார்.
இந்நிலையில் முன்னின்று வழிநடத்துவது போதும், மற்றவர்களை பின்னால் இருந்து இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தமிழக அணி வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளார்.
கோலி சதம் எடுத்து 50 சர்வதேச இன்னிங்ஸ்களாகிவிட்டது. தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொள்வதை கோலி நிறுத்தினாலே போதும் என டபிள்யூ.வி.ராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சோனி நெட்வொர்க்கில் டபிள்யூ.வி. ராமன் கூறியதாவது:
நாம் உண்மையில் அவரைத் தவறு கூற முடியாது. வாழ்க்கையில் பொதுவாக நாம் நினைக்கும் சில நடைமுறைகள் கிரிக்கெட்டில் அப்ளை செய்ய முடியாது.
அதாவது விராட் மீது நிறைய அழுத்தம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அதில் மேலதிக கவனம் குவிகிறது. அவர் சிறந்த வீரர் அதனால் நாம் அவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்.
சச்சின் டெண்டுல்கர் மீது இப்படிப்பட்ட அழுத்தம் இருந்தது, அதனால் 95 ரன்கள் எடுத்தாலும் அதுவே ஒரு குறைவான இன்னிங்ஸ் என்ற எண்ணமே ரசிகர்களுக்கு ஏற்படும்.
நான் விராட் கோலியின் பயிற்சியாளராக இருந்தேன் என்றால், 'விராட் முன்னால் நின்று அணியை வழிநடத்தியது போதும், மற்றவர்களை பின்னாலிலிருந்து இயக்குங்கள், இப்படி செய்தால் நீங்கள் உங்கள் பார்மை மீண்டும் பெற்று விடுவீர்கள்' என்று அவரிடமே கூறுவேன்.
ஹெடிங்லீ 2வது இன்னிங்சில் தன் பழைய சரளத்துடன் ஆடினார். நிச்சயம் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் நன்றாகவே ஆடுவார் என்று நம்புகிறேன்.
ஒரு தலைவராக, அவர் முன்னின்று வழிநடத்துவதை விடுத்து பின்னாலிலிருந்து அனைவரையும் இயக்கி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் அவர் மீண்டும் பழைய கோலியாவார் என அவர் தெரிவித்துள்ளார்.