"நாங்க பயப்படல.. மீண்டும் சீண்டுனா திருப்பிக் கொடுப்போம்" - பொங்கிய இங்கிலாந்து கோச்
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி பெற்றது குறித்து இங்கிலாந்து பயிற்சியாளர் சற்று முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்தது.
கிட்டத்தட்ட தோல்வி என்று உறுதி செய்யப்பட்ட இந்திய அணி, ஒரேயொரு விஷயத்தால் கம்பேக் கொடுத்து மெகா வெற்றிப் பெற்றது.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர்.
பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர்.
இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி விளையாடினர். எனினும், அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா களத்தில் இருந்தனர்.
பிறகு நேற்று முன்தினம் (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும்.
இந்த நிலையில், இங்கிலாந்து பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வூட், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து சில அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், "அந்த சாதாரண சண்டையை நினைத்து நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் எங்களை சீண்டினார்கள். நாங்கள் திருப்பிக் கொடுக்க நினைத்தோம். அவ்வளவுதான்.
என்னை பொறுத்தவரை இந்த மோதல், ஒரு மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை உருவாக்கிவிட்டது. எனினும், போட்டி முடிவை பொறுத்தவரை நாங்கள் ஏமாற்றமடைகிறோம், ஆனால் இது என்ன அட்டகாசமான டெஸ்ட் போட்டி! போட்டியில் அனல் பறந்தது.
தங்கள் நாட்டுக்காக விளையாடும் இரண்டு அணிகளும் அந்த போட்டியை நினைத்து பெருமை பட்டுக்கொள்ளலாம். அந்த போட்டியை நான் ரசித்து அனுபவித்தேன்.