வரலாற்றை மாற்றி எழுதிய இந்திய படை - கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 327 ரன்களும், தென்னாப்பிரிக்கா 197 ரன்களும் எடுத்தன. 130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 174 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 305 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து பேட் செய்த அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 191 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
செஞ்சூரியனில் இதுவரை தென்னாப்பிரிக்க அணியை டெஸ்ட் போட்டியில் எந்த ஆசிய அணியும் வீழ்த்தியதில்லை. முதல்முறையாக இப்போது தான் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை செஞ்சூரியனில் வீழ்த்தியிருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.