இலங்கையை வீழ்த்தி மாஸ் காட்டிய இந்திய அணி - முதல் டி20 போட்டியில் அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 89, ரோகித் சர்மா 44, ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களும் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தது. அந்த அணியில் அசலங்காவை (53 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.