மீண்டும் சரண்டர் ஆன இலங்கை... தொடரை வென்றது இந்தியா
இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இலங்கை அணி வீரர் அசலங்கா 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட இந்திய அணியில் தீபக் சாஹர் 69 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 53 ரன்களும் விளாச 49.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.