அதிகரிக்கும் கொரோனா... இ-பாஸ் பெற எப்படி விண்ணப்பிக்கலாம்? இதோ வழிமுறைகள்
தமிழகத்தில் கொரோனாவின் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு ஊரடங்கு நீட்டிப்புடன் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை 1752 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளி வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது. கோவில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருவோர் இ - பாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இ-பாஸ் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம் : இ-பாஸ் விண்ணப்பிக்க https://eregister.tnega.org/ என்ற இணையதளதிற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்றால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருகிறீர்களா? அல்லது வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருகிறீர்களா? என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
அதில் உங்கள் தேர்வை கிளிக் செய்ய வேண்டும். உடனே உங்கள் செல்போன் எண் கேட்கும். உங்கள் எண்ணை பதிவு செய்தார், உங்கள் நம்பருக்கு OTP வரும். அதை பதிவு செய்ய வேண்டும். பின்னர் பயணிகளின் பெயர், வயது, எங்கிருந்து வருகிறீர்கள், செல்லும் இடம், காரணம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இதை பூர்த்தி செய்த உடன் உங்கள் செல்போனுக்கு இ-பாஸ் வந்துவிடும். குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது கூட இ-பாஸ் வைத்திருப்பது மிக அவசியம்.