பைனான்சியர் வீடுகளில் தொடரும் ரெய்டு : அடுத்த ஸ்கெட்ச் நாயகனுக்கா ? பரபரப்பில் சினிமா வட்டாரம்
ஃபைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதே போல் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது .
யார் இந்த அன்பு செழியன்
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஆண்டவன் கட்டளை, மருது மற்றும் வெள்ளைக்கார துரை உள்ளிட்ட சில படங்களை தயாரித்து உள்ளார். சில தமிழ் திரைப்படங்களை தயாரிக்க உதவியாக பைனான்சியராகவும் இருந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொம்மனேந்தல் கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர்தான் அன்புச் செழியன். மதுரையில் குடியேறிய அவர், மதுரை, ராமநாதபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சின்ன அளவில் பைனான்ஸ் செய்ய ஆரம்பித்தார்.
அதோடு, மதுரை பகுதியிலும் பெரிய அளவில் பைனான்ஸ் செய்து வந்தார். பின்னர் வந்த பணத்தை வாங்கி வட்டிக்குக் கொடுத்து, தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். அதன் பின்னர்தான் அவர் சென்னை வந்து சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்.
சினிமா துறையினருக்கு பைனான்ஸ் கொடுத்து தனி ராஜாங்கமே நடத்தி வருகிறார் அன்பு செழியன் இந்த நிலையில்தான் அன்புச்செழியன் வருமான வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ளார். அன்புச் செழியனுக்கு சொந்தமான இடங்கள் மட்டும் அல்லாது அவரது சகோதரர்கள் உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில், சென்னையில் 10 இடங்களிலும் மதுரையில் 30 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள அன்பு செழியன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர்.
2020 ல் வருமான வரித்துறை சோதனை
பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 2020ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமா நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் 12 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சினிமா பிரபலங்களிடம் தொடரும் சோதனை
இவர் ரஜினிகாந்த் நடித்த கபாலி, தனுஷ் நடித்த அசுரன் உள்பட பிரம்மாண்ட படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தி. நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
சென்னையில் ஒரே நேரத்தில் சினிமா பைனான்ஸ்சியர், தயாரிப்பாளர் வீடுகளில் நடைபெறும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கணக்கில் வராத பணத்தில் சினிமா தயாரிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு அடுத்து உலக நாயகனிடமும் சோதனை நடத்தபடலாம் என கூறப்படுகிறது.