எதிர்காலமே!!!...புதுக்கோட்டையில் துவங்கப்பட்ட இன்பநிதி பாசறை...திமுகவில் சலசலப்பு
அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை ஒன்று துவங்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதற்காக போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திமுக
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி வழியில், தற்போது அடுத்த திமுக தலைவராக முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து அந்த பதவிக்கு அடுத்து முக ஸ்டாலினின் மகனும் தற்போதைய தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தான் வருவார் என பலரும் எதிர்பாக்கிறார்கள்
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் போராட்டத்தில் இது குறித்து திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியும், அமைச்சருமான துரைமுருகன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கள் எழுவதற்கு முன்பாகவே திமுகவை வாரிசு அரசியல் செய்யும் கட்சி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இன்பநிதிக்கு பாசறை
இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், முதலமைச்சர் முக ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதிக்கு பாசறை புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்காலமே! என அச்சிடப்பட்டு "இன்பநிதி பாசறை" உருவாக்கப்பட்டுள்ளதாகவும் "இன்பநிதி பாசறை"-யின் சார்பில் வரும் செப்டம்பர் 24-ந் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் அந்த போஸ்டர்களில் அச்சிடப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையானது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிர்வாகிகள்
இது போன்ற போஸ்டர்களை அடித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட புதுக்கோட்டை மணிமாறன், திருமுருகன் ஆகியோர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திடீரென இன்பநிதிக்கு பாசறை துவங்கி அதன் வழியாக நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் தற்போது திமுக வட்டாரங்கள் மட்டுமன்றி அரசியல் களத்திலும் விவாத பொருளாக மாறியுள்ளது.