பள்ளிவாசல் திறப்பு விழா - இந்து சமூகத்தினரின் செய்த நெகிழ்ச்சி செயல்!
பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து சமூகத்தினர் சீர்வரிசையுடன் வந்து பங்கேற்றனர்.
திறப்பு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது.
பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இந்த பள்ளிவாசலின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த இந்து சமூகத்தினர் மத ஒற்றுமையைப் போற்றும் வகையில் பங்கேற்றனர். இந்து பெண்கள் தேங்காய், பழத்துடன் சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர்.
வேற்றுமையில் ஒற்றுமை
அவர்களை முஸ்லிம்கள் வரவேற்றனர். பின்னர் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா பள்ளிவாசலை திறந்துவைத்தார்.
அப்போது பேசிய அவர் "இப்பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் சீர்வரிசை எடுத்துவந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்றது மறக்கமுடியாத நிகழ்வு. இந்தியா பல்வேறு மதங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு’’ என்றார்.