48-வது உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ரமணா
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரமணா பதவி ஏற்றுக்கொண்டார்
உச்சநீதிமன்ற தலைமை நீதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் நேற்றோடு முடிவடைந்தது. புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அப்போது, மூத்த நீதிபதி ரமணா பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதையேற்ற குடியரசுத் தலைவர், புதிய தலைமை நீதிபதியாக ரமணாவை நியமித்து கடந்த ஏப்ரல் 6ம் தேதி உத்தரவு பிறப்பித்து, வரும் 24ம் தேதி அவர் பதவியேற்பார் என்று அறிவித்தார்.
அதனையடுத்து, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரமணா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.