பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான் - வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம்?
பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் பாகிஸ்தானை விட்டு வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் நேற்று நள்ளிரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதற்கிடையில் சபாநாயகர், துணை சபாநாயகர், ஆளும் கட்சியினர் ஏதாவது அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்ய தயார் நிலையில் போலீஸ் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசாத் குவைசர், துணை சபாநாயகர் குவாஸிம் கான் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் சட்டப்படி எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் ஆயாஸ் சாதிக் அங்கு சபாநாயகராக பதவி ஏற்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்தி வைத்தார். இந்நிலையில் இம்ரான் கான் இரவோடு இரவாக தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பானி காலாவில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்குதனி ஹெலிகாப்டர் ஒன்றில் புறப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவர் தனது வீட்டில் இருந்தும் வேறு நாட்டுக்கு வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பாகிஸ்தானில் விமான நிலையங்கள் உயர் பாதுகாப்பு பணிகளில் இறங்கியுள்ளன.
என்ஓசி இல்லாமல் யாரையும் வெளியே அனுப்ப கூடாது ராணுவம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்ரான் கான் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்ரான் கான் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.