துபாய்க்கு ஓட்டம் பிடித்த இம்ரான்கான் மனைவியின் தோழி - ஊழல் குற்றவாளியாம்..!
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் இம்ரான் கான் மனைவியின் தோழி துபாய் தப்பி சென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இம்ரான் கானின் 3ஆவது மனைவி பஷ்ராபீவியின் நெருங்கிய தோழியாக இருக்கும் ஃபரா கான் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் உயர் பதவிகளில் பணி நியமனம் தொடர்பாக பலரிடம் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக எதிர்கட்சிகள் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது.
ஒருவேளை இம்ரான் கான் தற்போது நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் புதிய அரசு அமைந்தால் தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என ஃபரா கான் அச்சமடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர் சொகுசு கைப்பையுடன் விமானத்தில் பயணிக்கும் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ஆனால் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதனைக் கொண்டு இம்ரான் கான் அரசை எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றன.