பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் இம்ரான் கான்? - காரணம் என்ன
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன.
இந்த தீர்மானத்தின் மீது நாளை (31-03-22) விவாதம் நடக்க உள்ள நிலையில் வருகிற 3-ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார்.
பேரணியில் பேசிய பிரதமர் இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர்.
இந்த பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு இம்ரான்கான் மற்றும் அவரது அரசை குற்றம் சாட்டி கடுமையாக பேசினர்.
இந்தநிலையில், இம்ரான்கான் அரசுக்கு ஆதரவளித்து வந்த எம்.கி.எம் கட்சி தங்கள் ஆதரவை விலக்கி கொண்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் எம்.கி.எம் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இன்று 12.30 மணிக்கு தங்களது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டு பெரும்பான்மையை இழந்துள்ளதால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
எம். கி.எம் கட்சி தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்ததால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்து இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்தது குறிப்பிடத்தக்கது.