பள்ளிக்கல்வித் துறை ஊழியர்களுக்கு 10 மணிக்கு முன் வர உத்தரவு - மீறினால் சட்ட நடவடிக்கை
பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலத்துக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என்பது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

செயலக அலுவலகக் கையேட்டின் பத்தி எண் 510-ல் உள்ள அறிவுறுத்தல்களின்படி, அனைத்து அலுவலர்கள் / பணியாளர்களும் காலை 10.00 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும்.
அதன்படி, இத்துறையின் அனைத்துப் பணியாளர்களும் காலை 10.00 மணிக்கு முன் அலுவலகத்திற்கு வருமாறுஅறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அலுவலகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுட்டுள்ளது.
அனைத்து அலுவலக உதவியாளர்கள் மற்றும் பதிவேடு எழுத்தர்களும் காலை 9.30 மணிக்குள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவொரு விடுப்பு (CL/EL) / அனுமதியைப் பெறுவதற்கும், விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும், தவறினால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அவை சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.