அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன் : இளவரசி தகவல்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையத்தில் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 75 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையம் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக 154 பேரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி முடித்து அனைவரது பதில்களும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆணையத்தில் ஆஜராகுமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை இருவரும் ஆஜராகினர்.
இந்நிலையில் அப்பல்லோவில் 75 நாட்களும் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை ஓரிருமுறை மட்டுமே கண்ணாடி வழியாக பார்த்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற போது அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், 2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஜெயலலிதா உடல்நலக்குறைவுடன் இருந்ததாகவும் இளவரசி கூறியுள்ளார்.
அப்பல்லோவில் 75 நாட்களும் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை சசிகலா மட்டுமே உடனிருந்து கவனித்துக் கொண்டார் என இளவரசி கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.