மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க பிரபல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முன்னெடுத்த விநோத அணுகுமுறை
பெங்களூருவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸில் (IISc) அதிகாரிகள் பெருகிவரும் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க அவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்து அறையின் மின்விசிறிகளை அகற்றி வருகின்றனர்.
மின்விசிறிகளுக்கு பதிலாக (வால் மவுண்டட்,wall mounted)என சொல்லப்படும் சுவரிலேயே பொருத்தப்பட்டிருக்கும் விசிறிகளை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு மட்டும் 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இனி இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாமல் தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க நிர்வாகம் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த அணுகுமுறை குறித்து மாணவர்கள் சிலர் அவர்களுக்குள்ளேயே கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இதில் பதிலளித்தவர்களில் 89 சதவித பேர் இந்த மின்விசிறி மாற்றம் வேண்டாம் எனவும் மீதமுள்ளவர்கள் இந்த நடவடிக்கைபற்றி நாங்கள் கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதை மேற்கோள் காட்டி ஐஐஎஸ்ஸி (IISc) ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனருக்கு மாணவர்கள் அனுப்பிய மெயிலில்,
“இந்த கணக்கெடுப்பை உதாரணமாக கொண்டு நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும், ஏனென்றால் இந்த நடவடிக்கை மூலம் தற்கொலைகளை தவிர்க்க முடியும் என நினைப்பதில் சாத்தியக்கூறு மிகக்குறைவே” என தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இதுகுறித்து பேசியிருக்கும் சமுத்ரா ஃபவுண்டேஷன்ஸின் சிஇஓ மற்றும் ஆலோசகரான பரத் சிங், ஐஐஎஸ்ஸியின் இந்த அணுகுமுறை அறிவியல் தன்மையற்றதாக உள்ள்து.
நிர்வாகம் இதுபோன்ற அணுகுமுறைகளை தவிர்த்துவிட்டு மாணவர்களிடையே நிலவும் அடிமட்ட பிரச்சனைகள் என்ன என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு உதவும் வகையில் ஆலோசனைகள் வழங்குவதை உறுதிப்படுத்தவேண்டும் என தெரிவித்திருக்கிறார்.