மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் ஒடுக்க வேண்டும் - ஜெயக்குமார்
மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதை ஆரம்ப கட்டத்திலேயே ஒடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்
சென்னை வேப்பரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கே.சி.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜாதி மத இன மோதல் இல்லாத அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் இருந்தது.
மதக்கலவரங்கள் வராமல் காப்பாற்றுவது அரசின் கடமை. எந்த மதமாக இருந்தாலும் இங்கு அந்த மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதன் ஆரம்பக் காலத்திலேயே அதை ஒடுக்கி தமிழ்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பேரணியை 2017ம் ஆண்டு நடத்த அதிமுக அனுமதி வழங்கியதாக சொல்லப்படுகிறது. அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுத்துக்கொள்ளுதல் என்பது வேறு. மாவட்டம் முழுவதும் நடப்பது என்பது வேறு.
அப்படிப் பார்த்தால் ஏகப்பட்ட இடங்களில் இன்று நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளது. இந்த விசயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகின்றது.
அதிமுகவை பொறுத்த வரை எந்த பேரணி விசயங்கள் நடந்தாலும் பொது மக்களுக்கு அமைதி ஏற்படுத்தி தரவேண்டும். அந்த அமைதியை நிலைநாட்டிக் கொடுங்கள்” என பேசினார்.