மோடியைத் தோற்கடிக்க வேண்டுமெனில், முதலில் அவரை தோற்கடிக்க வேண்டும் - ராகுல் காந்தி!
டெல்லியில் மோடியைத் தோற்கடிக்க வேண்டுமெனில், முதலில் சந்திரசேகர ராவை தோற்கடிக்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
சட்டசபை தேர்தல்
தெலுங்கானா மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அங்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில், ஐதராபாத் மாவட்டம் நம்பள்ளியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அவர் பேசியதாவது "நான் மோடியை எதிர்த்து போராடுவதால், என் மீது பல்வேறு மாநிலங்களில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கருத்தியல் சார்ந்த எனது போராட்டத்தில் நான் சமரசம் செய்துகொள்ளமாட்டேன். நாட்டில் வெறுப்புணர்வை ஒழிப்பதுதான் எனது குறிக்கோள். அதற்கு, மத்தியில் ஆளும் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும்.
ராகுல் காந்தி பேச்சு
அதன் முதல்படியாக தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். பாரத ராஷ்டிர சமிதி, பா.ஜனதா, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவை ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
சந்திரசேகர் ராவின் கட்சிதான் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு ஆதரவு அளித்தது. ஊழல் மலிந்த அரசை சந்திரசேகர் ராவ் நடத்துகிறார். ஆனால் அவருக்கு எதிராக வழக்குகள் எதுவும் இருக்கின்றனவா?. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை போன்றவை சந்திரசேகர் ராவையோ, ஓவைசியையோ கண்டுகொள்வதில்லை" என ராகுல் காந்தி பேசினார்.