கரையை கடந்தது 'இடா' புயல்: பலத்த காற்றால் உருக்குலைந்தது லூசியானா
அமெரிக்காவை அச்சுறுத்திய 4ம் நிலைப் புயலான 'இடா' புயல், லூசியானா மாநிலத்தில் நேற்று இரவு கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது, நியூ ஆர்லியன்ஸ் நகரில் மணிக்கு 230 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
பலத்த காற்றால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.'கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் லூசியானாவின் ஆகப் பெரிய நகரான, நியூ ஆர்லியன்சை 'கத்ரினா' என்ற புயல் தாக்கியது.
அதனால் நகரின் 80 சதவீதப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது; 1,800க்கும் அதிகமானோர் பலியாகினர். அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, இடா புயலைக் கையாண்டோம்.

அதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் இடா புயல் கடந்த, 150 ஆண்டுகளில் லூசியானா காணாத மோசமான புயலாக இருந்தது' என, அந்த மாநில கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.
முன்கூட்டியே புயல் எச்சரிக்கை விடப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் பத்திரமாக இருந்தனர்; அதிக பாதிப்புள்ள பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இதனால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது. இருந்தும் புயல் காற்றால் மரங்கள் உடைந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. புயலால் ஏற்பட்ட முழு சேத விவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புயலால் கியூபாவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.