19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பை போட்டி ; இந்திய அணி கோப்பையை வென்றது - பிரதமர் மோடி வாழ்த்து
19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியினர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான 14-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.
இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் யாஷ் தல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 110 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதி போட்டியில் ஆண்டிகுவாவிலுள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா, ஐந்தாவது முறையாக ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியிருக்கிறது என்ற சாதனையை படைத்துள்ளது.
இதனை தொடர்ந்து பலரும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும் இந்திய அணியை வாழ்த்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நமது இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஐசிசி யு19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
போட்டியின் மூலம் அவர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான மற்றும் திறமையான கைகளில் உள்ளது என்பதைக் காட்டுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.